இன்று தொழிலாளர் தினமான மேதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் தினமாக இருக்கவேண்டிய மேதினம்கூட அரசியல்வாதிகளினால் அர்த்தமற்றதாகியிருப்பதை கடந்த பலவருடங்களாக நாம் அவதானித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.


இன்று ஒரு கடையில் ( Super marketஆக இருந்தாலும்கூட) சிப்பந்தியாக இருப்பவரினதோ, ஒரு அலுவலகத்தில் executive அல்லாத தரத்த்தில் இருப்பவரினதோ, பகட்டாக வேலைக்கு செல்லும் பல பெண்களினதோ சம்பளம் 10,000/- முதல் 15,000/- வரையே இருக்கிறது. இதில் அடிப்படைச்சம்பளம் 7,000/- அல்லது 8,000/- அளவில் தான் இருக்கிறது. சாதாரண ஹோட்டல்களில் வேலை செய்பவர்களினதும் நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்பவர்களினதும் அடிப்படைச்சம்பளம் 3,000/- இலிருந்து 5,000/- திற்குள்ளேயே.
இந்த சாமானியன் over time செய்தாலும் ஒரு மணித்தியாலத்திற்கு 12/- இலிருந்து 41/- வரையே கிடைக்கும். 41/- கிடைக்கும் ஒருவர் மேலதிகமாக 2,000/- ஐ தேடிக்கொள்ள ஒரு நாளைக்கு 2 மணித்தியாலம் செய்யவேண்டும். அப்படியானால் அவர் 5 மணிக்கு மூடப்படும் வேலைத்தளத்தில் 7 மணிவரை வேலைசெய்யவேண்டும். பயணத்திற்கு ஒரு மணித்தியாலம் செலவானால் வீடுசென்றடைய 8 மணி. அடுத்த நாள் 8.30க்கு வேலைக்குச்செல்ல அவர் 6 மணிக்கெல்லாம் தயாராகவேண்டும்.
இதன்படி பார்த்தால் வேலையோடு சம்பந்தப்படாமல் தனிப்பட்ட விடயங்களுக்கு இருப்பது 8 மணி முதல் 6 மணிவரையான நேரமே. இந்த 10 மணித்தியாலத்தில் 7 மணித்தியாலம் தூங்க செலவானால் அவருக்கு மீதமிருப்பது வெறும் 3 மணித்தியாலமே.இந்த 3 மணித்தியாலத்தில்தான் குழந்தைகளை பராமரிப்பது, அவர்கள் படிப்பதற்கு உதவுவது என எதையாவது செய்யமுடியும்.
விடுமுறை
பல பிரபல நிறுவனங்களில்கூட விடுமுறை என்பது குதிரைக்கொம்பே. அவர்கள் சட்டரீதியாக உரித்துடைய விடுமுறைகளைக்கூட பெற்றுக்கொள்ள மிகுந்த சிரமப்படுகிறார்கள். உரிமை பற்றி பேசினால் வேறொரு காரணத்தை காட்டி வேலையிலிருந்து தூக்கப்படும் அச்சமும் இருக்கிறது.
இலங்கையில் விடுமுறை அதிகம் என்று பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் இந்த விடுமுறையெல்லாம் பெரிய நிறுவனங்களில் இருப்பவர்களுக்கே கிடைக்கிறது.பல கடைகள் விடுமுறைகளை வழங்குவதேயில்லை.
வாழ்க்கைச்செலவு
இன்று இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின்விலை 100/-. தொழிலுக்காக கொழும்பு வந்திருக்கும் ஒருவர் 8,000/- ஐ சாப்பாட்டுக்காக செலவுசெய்கிறார். அறை வாடகை குறைந்தது 2000/- ஆகும். ஆனால் இவரின் சம்பளமோ 15,000/- ஐத்தாண்டாது.
பதிவர்களே, இனியாவது உண்மை நிலையை படம்பிடிப்போம். சக மனிதன் வாழ்க்கையை அவதானிப்போம். அவனுக்காக எழுதுவோம். இல்லை வெறுமனே சுறா படம்பார்த்து விமர்சனம் எழுதுவது மட்டுமே எமது கடன் என்றால்.......

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
அருமையான பதிவு
நன்றி Subankan, சில விடயங்கள் சொல்லப்படாமல் போவது தொடர்பான ஆதங்கத்தை பதிவுசெய்ய முயற்சிக்கிறேன்..
Post a Comment