08 April 2010

இலங்கையின் ஜனநாயக சாயம் வெளுக்கிறது

இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசின் 7ஆவது பாராளுமன்றத்தேர்தலில் இப்போது முடிவடைந்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்க இருக்கின்றன. தென்னாசியப்பிராந்த்தியத்தில் அதுகூடிய எழுத்தறிவு மிக்க நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இதன் காரணமாக மக்கள் இத்தேர்தல் தொடர்பான தெளிவுடன் இருப்பார்கள் என்றே கருதவேண்டும்.

அதிகளவான வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டமை ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக கருதப்படக்கூடியதென்றபோதும்; பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளமை இங்கு நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது.

வாக்களிக்க வந்தோர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இதுவரை வெளிவராத நிலையில் களத்தகவல்கள் இது பெரும்பாலும் 40%க்கும் 50%க்கும் இடையிலேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உச்சபட்சம் 50% என்று கொண்டால்கூட; ஆட்சியமைக்கும் குழுவுக்கு 2/3 பெரும்பானமை கிடைத்தாலும், இது மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் தொகையில் வெறும் 33% ஆக இருக்கும். அதாவது 2/3 பெரும்பான்மை கிடைக்கும் கட்சி மொத்த வாக்காளர்களில் 1/3 பங்கு ஆதரவைத்தான் கொண்டிருக்கும். ஏனையோர் இக்கட்சிதான் சிறந்த தெரிவு என்று கருதவில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.

இனி வரப்போகும் 6 வருட காலப்பகுதியில் இலங்கையின் தீர்மானம் எடுக்கக்கூடிய மக்க்ளில் 2/3 பங்கினர் ஆதரிக்காத அணி, ஆட்சியில் இருக்கப்போகிறது. இது எவ்வகையில் சனநாயகமாகும் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகும்.

அத்துடன் இன்று இலங்கையில் பிரயோகிக்கப்படும் அரசியல் முறையில் 50% ஆன இலங்கை மக்கள் அதாவ்து 7 மில்லியனுக்கும் அதிகமானோர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்றும் கருதப்படமுடிய்ம் என்பது மிக முக்கியமான அம்சம்.

இதை தவிர்த்து பார்த்தால்கூட இத்தேர்தலில் ஏதேனும் ஜனநாயக பண்புகள் இருந்தனவா என்ற கேள்விகள் இருக்கின்றன. இவற்றில் முதலாவது கவனிக்க வேண்டிய அம்சம், ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று 2 ,மாதங்கள் மாத்திரம் கடந்துள்ள நிலமையில் இத்தேர்தல் நடைபெற்றமையாகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற காலப்பகுதிக்காக இன்னும் ஜனாதி அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாத நிலமையில் இன்னொரு தேர்தலை இலங்கை மக்கள் முகம்கொடுத்தனர். கடந்த தேர்தலில் தாம் எடுத்த முடிவு தொடர்பு தொடர்பாக சீர்தூக்கி பார்க்கவேனும் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்காத அளவுக்கு இது மிக குறுகிய காலமாகும்.

எனவே இத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பவற்றை ஊகிக்க எவருக்கும் பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. அப்படியாயின் மக்களின் பணத்தில் இவ்வளவு பாரிய செலவுசெய்து தேர்தலை வைப்பதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு ஜனநாயக பொறுப்புள்ள பதில் இல்லை என்பது தெளிவு. அப்படியாயின் இத்தேர்தலை எவ்வாறு நாம் ஜனநாயகத்தின் அளவுகோலாக கொள்ளமுடியும்?

அதேவேளை இத்தேர்தல் தொடர்பான பிரசாரங்களின் போது இத்தேர்தலுக்குப்பின் இன்னும் 6 வருட காலங்களுக்கு தேர்தல்கள் இல்லை எனவும், இது இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவும் என்றும் சில அரச பிரதானிகள் முழங்கியுமிருக்கின்றனர். அப்படியாயின்

இந்நாட்டில் தேர்தல்களே இடம்பெறாவிட்டால் நாடு அபிவிருத்தியடையும் என்றோ

அல்லது

இந்நாட்டின் அபிவிருத்தியை தடுப்பது பொதுமக்கள் என்றோ

அல்லது

இனிவரும் 6 வருட காலப்பகுதியில் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகளே இடம்பெறும் என்றோதான்

அர்த்தப்படுத்திக்கொள்ளமுடியும். இல்லாவிட்டால் மக்களில் ஆணையைப்பெற்ற ஒரு கட்சி ஏன் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியெழுகிறது.

இது தொடர்பான உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எனது இப்பதிவின் கருத்துக்களோடு நீங்களும் உடன்படுவீர்களாயின் இக்கருத்து உங்களைப்போன்ற இன்னும் பலரை சென்றடைய உங்கள் வாக்குகளை இப்பதிவுக்கு அளிக்க மறக்கவேண்டாம்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.