14 September 2011

முன்னேஸ்வரம் - பௌத்த இனவாத ஜனரஞ்சக அரசியல்


இன்று சிலாபம் முன்னேஸ்வரம் சிறீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் நடக்கவிருந்த மிருக பலி பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா இந்திய திரைப்பட பாணியில் தடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட மத நடவடிக்கை தொடர்பான இரு பார்வைகள் இருக்கின்றன.

என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே
என ஒருசாராரும்
Link

இதை காட்டுமிராண்டி கால பழக்கம் என்று யாழ்ப்பாணத்தில் வாழும் "இந்துக்கள்" எதிர்க்கின்றார்கள். இந்து சமூகத்தில் மாறாத சாதீய முரண்பாடு மத வழிபாட்டிலும் புகுந்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களே இன்றைக்கும் சிறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து வந்துள்ளனர்
என மறுசாராரும் வாதிடுகின்றனர்


எது எவ்வாறிருப்பினும் ஒரு விடயத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வேறு. அதை அடாவடியாக தவிர்ப்பது வேறு.

"...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037

அண்மைக்காலத்தில் இச்சடங்கை எதிர்பதற்கான பூர்வாங்க வேலைகளை அரசின் ஏஜன்டுகள் ஆரம்பித்துவிட்டார்கள். மிருகபலியை எதிர்த்து போராடிய நிகழ்வுகளின் படங்களை நீங்கள் இணையத்தில் தேடிப்பார்க்கலாம். இந்நிகழ்வுகளில் பௌத்த மத குருக்களை தவிர்த்து பொதுமக்களில் ஒரு 50 பேரைத்தானும் காணமுடியவில்லை. இன்னும் கலந்துகொண்ட மதகுருமார்களில் அதிகமானோர் சிறார்கள் என்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயம். அப்படியான நிகழ்வுகள் ஊடகங்களில் எப்படி முதன்மைப்படுத்தப்பட்டன என்ற கேள்வி எழுகிறது.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு பௌத்த துறவியை மாடொன்று வணங்குவது போன்ற படங்களை நாடளாவியரீதியில் காட்சிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். நான் இவ்வாறான படங்களை பல அரச அதிகாரிகளின் மேசையின் கண்ணாடிகளில் கண்டிருக்கின்றேன். பல பொலிஸ்நிலயங்களில் இதனை பாதாதைகளாகவும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறான களத்தயாரிப்புகள் இடம்பெற்றுவந்தவேலையில் இத்தேவஸ்தானத்தில் இடம்பெறும் பலிபூஜையை தடுக்குமாறு மேல்நீதிமறத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிகிறது. நாள் குறிப்பிடப்பட்டு நடாத்தப்படும் மதச்சடங்கொன்றிற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்குவது எவ்வளவுதூரம் சரியான முடிவு என்பது பற்று சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும். நீதிமன்றம் அக்குறிப்பிட்ட தேதியத்தாண்டி அச்சடங்கை தடுக்க முடியாது என்று கூறினால் கூட அடுத்த வருடம்தான் அச்சடங்கை நிறைவேற்ற வாய்ப்புக்கிட்டும்.

மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருப்பதிலை. ஆனால் தனது இருப்பை தக்கவைப்பதற்காக பாமர மக்களை உணர்ச்சியூட்டக்கூடிய மதவாதத்தை அவர்பயன்படுத்திவருகிறார். களனி தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டது அவர்செய்த முதல் காரியம் மாட்டிறைச்சிக்கடைகளை மூடியதே. இன்னும் இப்பிரதேசத்தில் உள்ள கிரிபத்கொட நகரில் சிறுபான்மையினர் எவரும் வியாபார நிறுவனங்களை நடாத்தவும் முடியாது. மீறித்திறக்கப்பட்ட விறபனை நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இது சதிவேலையென்ற கருத்து இப்பிரதேசத்தை சேர்ந்த சகலரிடையேயும் இருக்கிறது.

இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றபோதெல்லாம் சகல தேசிய ரீதியான ஊடகங்களும் மௌனம் சாத்தித்து வந்துள்ளன. இவர் இப்பிரதேசத்திலசில மரக்கறிகளின் விற்பனையையும் தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனால் இவர் மதுபான விற்பனைக்கு தடை விதித்தபோது சகல ஊடகங்களும் வரிந்து கட்டி அரசை தலையிடச்செய்தன. செய்திகளை முக்கியத்துவப்படுத்துவதில் முதலாளிவர்க்கத்தின் பங்கை இச்சம்பவம் சுட்டிக்காட்டியது.

ஆனால் இங்கு இருக்கும் மிகப்பெரிய நெருடல், தூய பௌத்தத்தை வலியுறுத்தும் இவ்வாறான சக்திகள் மிகப்பிரபலமான பௌத்த துறவிகளின் பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாக மௌனம் சாதிக்கிறார்கள் என்பதே

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.