16 September 2010

இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

அஷ்ரப் - மறக்க முடியாத ஆளுமை. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் சிதறுண்டிருந்த பலத்தை ஒருமுகப்படுத்தி அதை லாவகமாக கையாண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி.

இன்று முஸ்லிம் அரசியலில் ஈடுபடுவோர் எல்லோருக்கும் அஷ்ரப் ஒரு மாமனிதர் என்று சொல்வதும், அவர் பாசறையில் தாம் வளர்ந்தவர்கள் என்று சொல்வதும் மிகுந்த அவசியமாகி இருக்கிறது. இது இவர்களின் அரசியலுக்கு அடிப்படையான மூலதனமாக இருந்தாலும் இதில் இருக்கும் ஆபத்தை சரியாக புரிந்துகொள்வது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்.

நேற்றுவரை முகவரியற்று இருந்தபலர் திடீரென தான் அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவதை காண்கிறோம். அல்லது ஏதாவது ஒரு அரசியல் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்க வெறுமனே அஷ்ரப் அன்று இப்படி செய்தார் என்று கூறுவதோ அல்லது ஒரு ஒலிக்கீற்றை ஒலிக்கச்செய்வதோ போதுமாக இருக்கின்றது. இதுவா அஷ்ரப் கண்ட கனவு?

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வரலாற்றில் நபிகள் நாயகத்தை விட உயர்ந்த தலைவர் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் அவருக்குப்பின் வெறுமனே வாய்ப்பேச்சால் அவரை புகழ்ந்துகொண்டு இருந்ததா? இல்லை! ஆனால் அவரின் இலட்சியங்களுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்பங்களிப்பை வழங்க நபிகளாரின் இலட்சியத்தை இன்றுவரை மழுங்கடிக்காமல் சமூகம் முன்னேறிச்செல்கிறது.

அதேபோல் காலித் இப்னு வலீத் (ரழி) என்ற உலகவரலாற்றில் தோல்வியையே சந்திக்காத தளபதியையும் இங்கு ஞாபகப்படுத்துவதும் அவசியம். முஸ்லிம்களின் இராணுவ தளபதியாக தொடர்ச்சியாக வெற்றிகளைத்தேடித்தந்த அந்த தளபதி; அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களால் பதவி நீக்கப்பட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள் சொன்ன காரணம், "வெற்றிகளை பெற்றுத்தருவது இறைவனே.. ஒரு தனிமனிதர் அல்ல என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடையே பாதுபாப்பதாகும்".
I have not dismissed Khalid because of my anger or because of any dishonesty on his part, but because people glorified him and were misled.[97] I feared that people would rely on him. I want them to know that it is Allah who give us victory; and there should be no mischief in the land
—Caliph Umar.

அதனால்தான் ராணுவ தளபதியாக பதவி நீக்கப்பட்டபோதும் தனக்குப்பின் ஆட்சிசெய்ய தகுதியானவராக உமர் (ரழி) அவர்களால் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் பெயரிடப்பட்டார்கள்.

இதன்மூலம் ஒரு தனி நபரில் ஒரு சமூகம் தங்கியிப்பதை இஸ்லாமும் அதன்பின் இஸ்லாமிய வழி வந்த இஸ்லாமிய தலைவர்களும் ஒருபோதும் ஆதரித்ததிலலை என்பது தெளிவாகின்றது.

ஆனால் இன்று அஷ்ரப் பாடுபட்ட இலட்சியங்களை சமூகம் மறந்து தனி மனித வழிபாடு போன்ற ஒன்றை செய்து கொண்டிருப்பதால்தான் அன்று அஷ்ரப்பினால் சாதிக்க முடிந்த பலவற்றை எம்மால் இன்று சாதிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே இன்று முஸ்லிம் சமூகம் செய்யவேண்டியிருப்பதெல்லாம் அஷ்ரப் என்ற இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் பேசிப்பேசி எதிர்காலத்தை இழக்காமல் அவர் பயணித்த பாதையில் பயணிக்ககூடிய தகுதியான தலைவரின்பின் அணிசேர்வதே..

அஷ்ரப் அவர்கள் மரணித்து இன்றோடு 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதுபற்றி இரண்டு கட்டுரைகள்
அஷ்ரப் - அவர் வயற்காரனாக இருந்தார்
எம்.எச்.எம். அஷ்ரப்: கைவிடப்பட்ட சமூகத்தை முன்னிறுத்திய தலைவன்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.