17 June 2010

மட்டக்களப்பு -அவதானித்த விடயங்கள்

பாசிக்குடா
அலைகள் அற்ற கடற்கரையான பாசிக்குடா கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். ஏறத்தாள ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தோள் அளவுக்குத்தான் தண்ணீர்மட்டம் இருக்கும் என்கிறார்கள். நான் ரிஸ்க் எடுக்கவில்லை.

பாசிக்குடா பிரதேசத்தில் "அண்ணே நொங்கு அண்ணே" என்று கெஞ்சும் இளநீர் மற்றும் நுங்கு விற்கும் சிறுவர்களை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. 15/- ஒரு நுங்கு. இதே பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள செங்கலடி திரையரங்கில் சிங்கம் முதல் காட்சி பார்ப்பதற்கு அரங்கு கொள்ளாத கூட்டம்.

பாதைகள்
ஜனவரிமாதம் காபட் போடப்பட்டுக்கொண்டிருந்த பாதைகள் பெருமளவில் முடிந்துவிட்டன. அம்பாந்தோட்டையிலிருந்து காரைதீவு சந்திக்கான அதிவேக பாதை முடியுமாயின் இப்பிரதேச போக்குவரத்து பிரச்சினைகள் பல முடிந்துவிடும்.

சோதனை சாவடிகள்
கொழும்பு மட்டக்களப்பு பாதையில் சோதனைக்காக நிறுத்தப்படுவதில்லை. ஆனால இரத்தினபுரியினூடான அம்பாறை பாதையில் 4 சோதனை சாவடிகள் இப்போதும் இருக்கிறது என்று கேள்வி.

குடிநீர்
அம்பாறை கல்முனை அக்கரைப்பற்று பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் திட்டம் பூர்த்தியாகியிருக்கிறது. ஆனால கல்முனைபிரதேசத்தில் ஒரு நாளைக்கு பல தடவைகள் நீர் வெட்டு முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.

பிள்ளையான் மற்றும் கருணா
பிள்ளையான் அதிக பிரபலம் என்று தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தேர்தல் தோல்வி ஏன் என்பதுதான் தெளிவில்லை. ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்வது பிள்ளையானுக்கு நல்லது.

புதிய பிரதேச சபை
தீகவாபி என்ற புதிய பிரதேச சபை உருவாக்கப்படப்போகிறதாக பேசிக்கொள்கிறார்கள். தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இருக்கும் தீகவாபி, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களை இணைத்து இப்பிரதேச சபை உருவாகப்போகிறதாம். ஆகக்கூடியது 200 குடும்பங்களை மாத்திரம் கொண்ட தீகவாபியின் பெயரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களை கொண்ட பாலமுனை ஒலுவில் பிரதேசத்திற்கு வைக்க முயல்வது பற்றி மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். புதிதாக உருவாகியிருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் வருமானத்தைக்கொண்டு தீகவாபி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டமாக மக்கள் இதை பார்க்கிறார்கள்.

In Deegavapi area, Muslims has possessing more than 6000 acres of paddy lands while Sinhalese has less than 150 acres of paddy lands.


இத்திட்டத்திற்காக புதிய சிலைகள் மண்ணுக்குள் இருந்து இனி கண்டெடுக்கப்படும் என்றும் மக்கள் எதிர்வுகூறுகிறார்கள்.

அபிவிருத்திப்பணியில் வேலையாட்கள்
இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றபோதும் அதற்கான ஆள் வளம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் பிரதேச மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் தனித்தனியாக இருக்கும் இப்பிரதேசத்தில் இப்பிரதேசத்தின் கலாச்சாரம் பற்றிய போதிய அறிவற்றவர்கள் தங்குவதால் தேவையற்ற மனத்தாபங்களே ஏற்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இது தொடர்பாக தமது வேலையாட்களுக்கு அறிவுறுத்தல் நல்லது.


நிந்தவூர்
நிந்தவூர் பிரதேசத்தை இரண்டு தொகுதிகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படுவதன்மூலம் நிந்தவூரைச்சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராவதை தடுப்பதற்கு அதாவுல்லா முயற்சிப்பதாக நிந்தவூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதாவுல்லா
தீகவாபி பிரதேசத்தை புதிதாக உருவாக்கும் அரச ஆவணங்களிலும் நிந்தவூர் பிரதேசத்தை பிரிக்கும் அரச ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின் மாண்புமிகு அமைச்சர் அதாவுல்லா அரசியலிலிருந்து விலகுவார் என்றும் ஒரு கதையடிபடுகிறது. அதற்காகத்தான் அவருக்கு அந்த அமைச்சும் வழங்கப்பட்டது என்கிறார்கள். எது உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.