24 April 2010

100ஐ நோக்கி பயணிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை - கவுன்டிங் ஸ்டாட்



கண்டி, திருகோணமலை மாவட்ட மீள்தேர்தல்கள் முடிவுவரும்வரை பிற்போடப்பட்டிருந்த அமைச்சரவை பதவியேற்பு வைபவம் நேற்று பிற்பகல் சுபவேளையில் நடந்து முடிந்தது.

இதன்மூலம் பாராளுமன்றத்தேர்தல் நடந்த நாள் முதல் இன்று வரை ஆளும்கட்சியின் அமோக வெற்றி பற்றி தலைப்புச்செய்தி வெளியிட்டு வந்த அரசஊடகங்கள் இனி அமைச்சரவை பட்டியலை வாசித்தும் பிரசுரித்தும் அதன் பின் அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு சென்று பதவியேற்றது தொடர்பான செய்திகளையும் அவர்களை சகல மத பிரமுகர்கள் வாழ்த்துவதையும் அவர்தம் பிரதேசங்களில் நடைபெறபோகும் வரவேற்புக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை தலைப்புச்செய்திகளாக்கியும் காலம் தள்ளுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பதவியேற்ற அமைச்சரவையில் 37 அமைச்சர்களும் (ஜனாதிபதியைச்சேர்த்து 38) 39 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

நேற்று 37பேரை மாத்திரம் அமைச்சர்களாக பதவியேற்கச்செய்ததன் மூலம் ஜனாதிபதி;  தான் வாக்களித்த 35 பேர் கொண்ட அமைச்சர்வையை செய்து காட்டியுள்ளதாக அவரது தீவிர ஆதரவாளர்களை நம்பவைக்க முயற்சித்திருப்பது தெளிவு.

இங்கு 
  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 அமைச்சரும் 3 பிரதியமைச்சர்களும்
  • துறைமுக விமானசேவைகள் அமைச்சுக்கு 2 பிரதியமைச்சர்களும்
நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கப்படல்வேண்டும்

நாவலப்பிட்டிய சம்பவம் தொடர்பாக கட்சிக்குள் விசாரணைகள் நடைபெறுவதால் அதன் முடிவு வரும் வரையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பொறுப்புகள் வழங்கப்படவில்லை. எனவே இவ்வமைச்சரவை இன்னும் வளரும் என்பது தெளிவு.

பட்டியலை பெரிதாக பார்க்க படத்தின்மீது click செய்யவும்



எப்போதும் ஜனாதிபதி வசம் இருக்கும் 
  • பாதுகாப்பு மற்றும் 
  • நிதி அமைச்சுகளை 
தவிர்த்து, 
  • துறைமுகம் , விமானசேவை, 
  • பெருந்தெரு 
ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர
  • ஊடகம், தகவல்கள்
  • கால்நடை அபிவிருத்தி
  • உயர் கல்வி
  • தொழிநுட்பம், ஆராய்ச்சி
ஆகிய 4 அமைச்சுக்கள் இன்னமும் ஜனாதிபதி வசம் இருக்கின்றன / யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் 6 அமைச்சுக்கள் காத்திருக்கின்றன என்று தெரிகிறது.

அத்துடன்
  • இளைஞர் அலுவல்கள்
  • விளையாட்டு 
  • சுற்றாடல்
  • தொழில் உறவு, உற்பத்தி மேம்பாடு 
  • தேசிய மொழி, சமூக நல்லிணக்கம்
  • பௌத்த, மத விவகாரம்
  • பொது முகாமை, மறுசீரமைப்பு
பாராளுமன்ற அலுவல்கள்
ஆகிய 8 அமைச்சுக்களுக்கு பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இவையும் கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் காத்திருப்பதாகவே கருத தோன்றுகின்றது.

2/3 பெரும்பான்மையைப்பெற வெறும் 6 பாராளுமன்ற உறுப்பினர்களே தேவையாக இருக்கையில் மொத்தமாக 14 பதவிகளை ஆசைகாட்டுவதற்காக வைத்திருப்பதுபோல் தெரிகிறது. இந்த 14 பதவிகளில் 4; எஸ்.பி., கெஹலிய, அமுனுகம, பைசர் முஸ்தபா ஆகியோருக்கு கிடைக்கக்கூடும்.

சுற்றுலாத்துறைக்கு அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ நியமிக்கப்படவில்லை. இவ்வமைச்சு வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டால் இன்னும் 2 பதவிகளும் இருக்கின்றன.

இவையாவும் நிரப்பப்பட்டபின்
அமைச்சர்கள் 37 + 6 + 1 = 44 ஆகவும்
பிரதியமைச்சர்கள் 39 + 8 + 1 = 48 ஆகவும்
அமையக்கூடும். ஈற்றில் அமைச்சரவை 100ஐத்தொடும். இது ஆளும் தரப்பில் 2/3 பங்காகும்.

அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான சுவையான சம்பவங்களை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன்

No comments:

Post a Comment

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.