15 December 2009

போட்டி தொடங்குமுன்னே வெற்றிய தாரைவார்த்த பொன்சேக்கா


இதுவரை காலமும் எவ்வித திருப்பங்களும் இன்றி சென்றுகொண்டிருந்த இலங்கையின் அரசியல் களம் திடீரென எதிர்பார்க்காத விதமாக பொன்சேக்காவின் அரசியல் பிரவேசம் முதல் சூடுபிடித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல்; யுத்த முடிவுடன் இன ரீதியான வாக்களிப்பு நடாத்தைகள் கொண்டு பிரிக்கமுடியாததாக மாறியுள்ளது. யுத்த முடிவுவரை பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்பார்க்கப்பட்ட ஒரே நோக்கிலான வெவ்வேறு அணுகுமுறைகளின் முகாம்களுக்கிடையேதான் போட்டி இருந்தது. யுத்த முடிவுக்குப்பின் "யுத்த ரீதியான தீர்வு" முகாம்; அதிகளவான "யுத்த தீர்வு எய்தப்பட முடியாதென நம்பிய" முகாமைச்சார்ந்த வாக்காளர்களை எளிதாக ஈர்த்துக்கொண்டது.

அரசு இதுவரை ஆழம் பார்த்த மாகாணசபைத்தேர்தல்களிலெல்லாம் தன் ஆதரவாளர்களிடையேயே ஓரளவு வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. கிழக்கு மாகாண சபத்தேரதலில் முஸ்லிமா தமிழா என்று தொடங்கப்பட்ட பிள்ளையான் ஹிஸ்புல்லாஹ் சர்ச்சை முதல் தென்மாகாண சபையில் இதுவரைதொடர்கின்ற முத்துஹெட்டிகம அனார்க்கலி சண்டைகள் வரை இந்தபோக்கு நீடித்தது. இவைமூலம் இம்மாகாண சபை தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியையாயினும் அடுத்த தேர்தலில் அரசு இழக்க நேரிடும்.

இவ்வாறான நிலமையில்தான் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு நம்பிக்கையிருந்தது. இதை சரியாக கணித்த அரசாங்கம் யுத்த வெற்றிமீது மக்களுக்கு பெருமையின் சூடுதணியமின்பே ஜனாதிபதித்தேர்தலை நடாத்த தீர்மானித்தது.

ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கெதிராக ரணிலோ அல்லது எஸ்பியோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் வெற்றி மிகத்தெளிவானதாக கணிப்பிடப்பட்டது. (இவ்வாறான தேர்தல் ஒன்றில் தன்னை பலிக்கடாவாக்க ஒருபோதும் ரணில் நினைத்திருக்கமாட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.)

ஆயினும் எதிர்பாராத விதமாக ஒரே அணியில் இருந்த சரத் பொன்சேக்கா ஜனாதிபதிக்கெதிராக இறக்கிவிடப்பட்டார். இதன்மூலம் யுத்த வெற்றிக்கு பிரதான பங்கு வகித்தவர் யார் என்ற போட்டியாக தேர்தல் களம் மாறியது. இதன்மூலம் பெரும்பான்மை மிக்க "யுத்த தீர்வு முகாம்" இரண்டாக பிளவுற்றது.

ஆரம்பத்தில் பொன்சேக்கா அரசியலுக்கு வருவதை இம்முகாமை ஆதரிக்கும் மக்கள் விரும்பாவிடினும், அவர்களில் பாதியளவானவர்கட்காவது பொன்சேக்காவுக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் இருந்தது. இது அவர் மீது களனி விஹாரையில் வைத்து சிலர் கூக்குரலிட்டதுடன் அதிகரித்தது. இதுதான் அவர்மீது ஊடகங்களின் கவனம் குவியவும் காரணமாகியது.

இம்மனப்பாங்கை அரசு சரியாக புரிந்துகொண்டது. அன்றுமுதல் அரசு பொன்சேக்காவை விமர்சிப்பதை குறைத்து அவர் ஒரு அதிகார ஆசை மிக்கவராக காண்பிப்பதற்கு மொத்த அரச அதிகாரங்களையும் பாவிக்கத்தொடங்கியது.

இருந்தும் இது ஒன்றுமட்டும் போதாது என்பதும் தெளிவானது. எனவே "மக்கள் எதிர்பார்ப்பு" என்ற தலைப்பிலான விளம்பரங்களை முடுக்கிவிலப்பட்டன. பொருட்களின் விலை குறைப்பு மற்றும் எதிர் முகாம் பிரபலங்கள் தத்து எடுக்கப்பட்டமை என்பன அரசு பொன்சேக்காவை எவ்வளவு தூரம் மதிப்பிட்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அடிக்க வந்தவனுக்கு பொல்லைக்கொடுத்த கதையாக நேற்று பொன்சேக்கா நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு அமைந்தது. யுத்த குற்றங்களை அரசின்மீது முக்கியமாக பாதுக்காப்புச்செயலாளர்மீது பொன்சேக்கா சுமத்தியதாக வந்த செய்திகளை தொடர்ந்து அதுவரை இருந்த சமபல போட்டி; ஒரேயடியாக ஜனாதிபதிக்கு இலகுவான போட்டியாக மாற்றம்பெற்றது. இனிவரும்காலத்தில் தன் சுய நலத்துக்காக படைவீரர்களுக்கு எதிராக பொன்சேக்கா கருத்து தெரிவிப்பதாக மக்கள் கருதுவது அவர்மீது நிச்சயமாக சந்தேகத்தை கிளப்பும். அதை வலுவாக்குவதுதான் இனி ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரமுமாகவும் அமையும்.

இதை இன்று எதிர்க்கட்சிகள் உணர்ந்து; மறுப்புத்தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்ட்போதும் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே..

இதேவேளை எதிர்கட்சிகளுக்கு பலமான வேட்பாளர் கிடைத்தும் அவரை சரியாக சந்தைப்படுத்த முடியாததாக எதிர்க்கட்சி அணி இருக்கிறது. முக்கியமாக அவர்களுக்கு தன் பலமும் பலவீனமும் தெரியவில்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது. பொன்சேக்காவுக்கு தகுந்த இடம் வழங்கப்படவில்லை என்ற பிரச்சாரத்தை விடுத்து ஏனைய விடயங்களில் கவனஞ்செலுத்தினால் அவர்களால் பெரும்பான்மையான "யுத்த வெற்றிக்கு ஆதரவான அணியை" இரண்டாக பிளவுபடுத்த முடியாதுபோகும். அவ்வாறான பிளவு ஒன்று இடம்பெறாதவரை பொன்சேக்காவுக்கு வாய்ப்புகளே இல்லை. இதைவைத்து கணிக்கும்போது பொன்சேக்கா நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டுடன் போட்டிக்கு முதலேயே வெற்றியை தாரைவார்த்துவிட்டார் எனலாம். ஆயினும் எதிர்வரும் ஒருமாத அவகாசத்தில் ஏதாவது வழியொன்றையும் பிரயோகிக்கலாம்.

இதேவேளை தமிழ் ஊடகங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கு பற்றி அதிகளவு பேசப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நிச்சயமாக பெருவாரியாக இத்தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள். அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் பிரதான வேட்பாளர்களில் எவராயினும் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது அதன் ஆதரவுத்தளத்தில் நிச்சயமாக ஒருபின்னடைவைத்தரும். இன்னும் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பதும் அரசுக்கு உதவிசெய்வதாக அமையும். அவ்வாறான கூட்டு ஒன்று இடம்பெறும் சமயத்தில் எதிர்கட்சிகளின் முகாமை புலிகளின் முகாமாக பெயரிடுவதும் நம்பவைப்பதும் அரசுக்கு மிக எளிதானதாகும்.

1 comment:

  1. சரியான கணிப்பு.. தமிழ் மக்களின் வாக்குகள் இம்முறை தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது..

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.