30 July 2012

தமிழ் முஸ்லிம் கூட்டு பற்றிய கூப்பாடு


கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது முதல் தமிழ் தரப்பில் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய கூச்சல்கள் கேட்கத்தொடங்கிவிட்டன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிழக்கில் ததேகூ முதலமைச்சரை பெறத்தக்கதாக முஸ்லிம் தரப்பின் காய் நகர்த்தல்கள் இருக்கவேண்டும் என்பதே.

கிழக்கில் இரு சமூகங்களினதும் சனத்தொகை ஏறத்தாள சமமானதாக இருப்பதாக கணிப்பீடுகள் காட்டியபோதும் தமிழ் தரப்பில் பாதியளவினர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்ற வெளிப்படையுண்மையை இவர்கள் வசதியாக மறந்துவிடுவர். இதன்மூலம் கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கானது என்பதை மறைப்பதே இவர்களது நோக்கம். இப்போக்கை சகல முன்னணி தமிழ் ஊடகங்களின் அரசியல் வித்தகர்களின் பத்திகளிலும் பேச்சிலும் காணமுடிகின்றது. இது தமிழ் தரப்பு எவ்வாறு கபட நாடகம் ஆடுகின்றது என்பதற்கு தெளிவான சான்றாகும்.

மற்றும்,
இவர்கள் கூப்பாடு போடும் முஸ்லிம் தமிழ் இன ஐக்கியம் என்பது வெறுமனே முதலமைச்சர் பதவியை தமிழருக்கு தாரைவார்ப்பதாகும். அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய விட்டுக்கொடுப்பாகும். ஆனால் அவ்விட்டுக்கொடுப்பை செய்தால் முஸ்லிம் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்கு எவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராக இருப்பர் என்பது பற்றிய வெறும் வாய்ப்பேச்சளவிலான வாக்குறுதிகளேனும் தமிழ் தரப்பால் முன்வைக்கப்படுவதில்லை.

ஆனால் சிங்கள தரப்போ, சில வாக்குறுதிகளை வழங்குகிறது. அதில் பல மீறப்பட்டால் கூட முஸ்லிம் தரப்பை பொறுத்தவரை சிங்கள முஸ்லிம் கூட்டில் ஒரு சில வாக்குறுதிகளாவது நடைமுறைப்படுத்தப்படும். ஒரு வாக்குறுதியும் இல்லாத கூட்டைவிட இது எவ்வளவே மேல் என்பதை சில அரசியல் வித்தகர்கள் வசதியாக மறைப்பது தமிழ் தரப்பினை இன்னும் ஏன் நாம் நம்பக்கூடிய நிலையில் இல்லை என்பதை தெளிவாக்கும்.

நிலமை இவ்வாறு இருக்க தமிழ் தரப்போ மஹிந்த அரசுடன் முஸ்லிம் தரப்பு இணைந்தால் பின்னொரு நாளில் அரசு முஸ்லிம் தரப்பை ஏமாற்றும் என்று நீலிக்கண்ணீர்வடிப்பது ஆடு ந்னைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கொப்பானதாகும்.

இவ்வளவு ஏன்?


மன்னாரில் மீன்பிடித்துறையொன்றினை ஒப்பந்த அடிப்படையில் பாவித்த கத்தோலிக்க மீனவர்களை ஒப்பந்தம் முடிந்ததும் விலகிச்செல்ல கோரமுடியாததாக தமிழ் தரப்பு இருக்கிறது. அது தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் விட அது தயாராக இல்லை. இத்தனைக்கும் இவர்கள் இதுவரை நாளும் ஒன்றறக்கலந்திருந்த புலிகளின் தர்ப்பும் இவ்வொப்பந்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றது!! அதையேனும் மதிக்க இவர்கள் தயாராக இல்லை!

மாறாக இவர்கள் குறிப்பிட்ட மீன்பிடித்துறை பற்றிய தீர்வைப்பேசாமல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது நீதிபது ஜூட்சன் சொன்ன இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை வேதவாக்காக நம்பி ரிசாத் அவர்களை சிறையில் அடைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபடுகிறார்கள்.

கேவல்ம் ஒரு மீன்பிடித்துறையொன்றை ஒப்பந்தப்படி கொடுத்துவிடுங்கள் என்று அறிக்கையிடாத தமிழ் தரப்போடா நாம் கூட்டுச்சேரவேண்டும்?

28 July 2012

புலிகளின் ஆத்ம சாந்திக்கு பாடுபடுகிறாரா குருபரன்?


பிரபல ஊடகவியலாளர் நடராஜா குருபரன் அவர்கள் ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இன்று Global Tamil News இல் பிரசுரமாகியுள்ளது.

சிங்கள தரப்புடன் நீங்கள் கூட்டு சேர்ந்துள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டு அக்கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கின்றது. தனது மீன்பிடிதுறையை கோரிய அப்பாவி முஸ்லிம் மீனவர்களிக்காக ஒரு கட்டுரையை எழுத துணியாத குருபரன் அவர்களின் யோக்கியதை குறித்த கேள்வி எழும்புகின்றபோதும் அதை வாசிக்கும் எப்பக்கத்தையும் சாராத சாதாரணர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்காக வரிக்குவரி மறுமொழியளிக்க முயற்சிக்கிறேன்.

மிக நீண்ட கட்டிரையென்பதால் முதற்பாதிக்கு பதிலளிக்கப்படுகின்றது.


//கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான் குடியிலும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நுணுக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகிறது.//

முஸ்லிம்கள் பிரதேச, தேச, மொழி எல்லைகளை தாண்டிய ஒரு சமூகமாகும். தம்புள்ள தாக்குதல் குறித்தும் ஆப்கானிஸ்தான் தாக்குதல் குறித்தும் ஈராக் தாக்குதல் குறித்தும் யாழ்ப்பாணம் கொழும்பு காத்தான்குடியென நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தே வந்திருக்கிறோம். இவை பற்றி ஊடகங்களில் ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது. இவ்வார்ப்பாட்டங்கள் அரசியல் நலனை முன்னிலைப்படுத்தியதல்ல என்பதை கட்டுரையாசிரியர் நன்கறிவார்.  உள்நாட்டில் அரசியல் பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையும் உள்ள ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை கொண்ட முஸ்லிம் மக்களிடையே, அரசியல் தலைமைகளிடையே முஸ்லிம்களின் பிரச்சினைகளையிட்டு கட்சி பேதங்களைத்தாண்டிய பொதுநலம் இருந்திருப்பதையும் அவர் அறிவார். இவை அனைத்துக்கும் பின்னால் உள்ள அதே அரசியல்தான் இவ்வார்ப்பாட்டங்களுக்கும் இருக்கிறதென்பது பழுத்த ஊடகவியலாளருக்கு விளங்கவில்லையா?

//ரிஸாத்பதியுதீனும் அவர் போன்றே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு சலுகை காணும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகளை இட்டு எந்த அக்கறையுமற்றிருக்கிறார்கள்.//

முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதையிட்டு கட்டுரையாசிரியர் என்ன கருதுகிறார் என்று நாமறியோம். அது இலங்கையில் உள்ள பிரச்சினைகளை காட்டி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோருவது போன்றதோ அல்லது தன்னை நாடு கடத்த கூடாதென்பதற்காக இலங்கையில் பிரச்சினை என்று ஊடகங்களில் ஆவணப்படுத்தப்படத்தக்கதாக கூக்குரல் இடுவதை போன்றதோ அல்ல.

இன்னும்

எழும் எப்பிரச்சினைக்கும் எவ்வித அதிகாரமுமற்ற, அதிகராம் கிடைக்கும்போது அராஜகம் செய்து வரலாறு படைத்திருக்கின்ற கூட்டத்திடம் முறையிட்டு பலன் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவேதான் நாம் யதார்த்தமான அணியுடன்தான் நாம் இருக்கின்றோம் என்பதும் கட்டுரையாளர் தெரிந்தே மறைத்திருக்கும் விடயமாகும்.

//மன்னாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவற்றிருக்கிறது. இங்கே இந்தப்பிரச்சனையை புறமிருந்து பார்ப்பவர்களுக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன.//

மன்னாரில் என்ன நடக்கின்றது என்பதை அறிய நீங்கள் புறத்திலோ புலத்திலோ இருந்து பார்ப்பதை விடுத்து சம்பந்தப்பட்ட மக்களிடம் கேட்டுத்தெரிவது நல்லது. அதற்கான வாய்ப்பு இதுவரை உங்களுக்கு கிடைக்கவிலலை என்பது நகைப்புக்கிடமானது.

//மன்னாரில் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?//

இராயப்பு ஜோசப் தலைமையிலான கத்தோலிக்க முழுவோன்றுதான் காரணமாக இருக்கின்றது. அதற்கு துப்பாக்கியேந்தாத புலிக்கூட்டம் ஒன்று உதவுகின்றது.

//எந்த வகையில் தடையாக இருக்கிறார்கள்? //

அவர்களால் முடிந்த சகல வழிகளிலும் மற்றும் அவர்கலது அதிகாரமும் செல்வாக்கும் எத்துணை தூரம் செல்லுமோ அதுவரைக்கும்.


//முஸ்லீம் மக்களை அவர்கள் பூர்வீகமாக வெளியேற்றப்படுவதற்கு முன் கடைசியாக வாழந்த சொந்த இடத்திலா அல்லது  அரசாங்கக் காணிகளிலா அல்லது தமிழ் மக்களின் காணிகளிலா  அமைச்சர் குடியேற்ற முனைகிறார்?//

இதற்கு மிகத்தெளிவாக ஆம் என்ற பதில் இருக்கிறது. யாரேனும் ஒருவர் அபகரித்த காணிகளுக்கு பினாமிகளினூடாக தனது செல்வாக்கை பயன்படுத்தி காணியுறுதியை பெற்றிருந்தால் அதை இல்லாமல் செய்வதும் எமது உரிமைக்கான போராட்டத்தில் ஒரு அங்கமாகும். அவ்வாறின்றி அமைச்சர் அவர்கள் அநியாயமாக நடந்தால் மிகத்திறமையான சட்டத்தரணிகளை கொண்ட சமூகம் நீதிமன்றினூடாக அதைபெற்றுக்கொள்ளாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கு கட்டுரையாசிரியரிடம் பதில் எதிர்பார்க்கிறேன்.

//மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் வாய்ப்புக்களும் பொதுவான வாழ்வாதாரங்களும் வளங்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உரிய முறையில் பங்கிடப்படுகிறதா? //

குத்தகைக்கு வழங்கிய காணியில் பங்கீடு பற்றிய கேள்வியை எழுப்பும் கட்டுரையாசிரியரின் நகைச்சுவை உணர்வு மெச்சத்தக்கது. அவ்வாறன்றி அவர் தனது கேள்வி நியாயமானது என்று கருதினால் அவரின் சொந்தக்காணியில் வளப்பகிர்வாக எனக்கொரு பங்கு தர அவர் பின்னிற்க மாட்டார் என்ற உறுதிமொழியை அவர் தரவேண்டும்.

இன்னும் ஒரு சமூகத்தை துரத்தியடித்துவிட்டு அச்சமூகத்தின் வளங்களை இருதசாப்தங்களாக சுரண்டி சகல வளங்களையும் முக்கிய வசதிகளையும் கையகப்படுத்திய சமூகத்திடம் கேட்கவேண்டிய கேள்வியை பாதிக்கப்பட்ட சமூகத்திடம் முன்வைக்கிறார் கட்டுரையாசிரியர்.

//முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?//

//மக்களை போராட்டத் தூண்ட முதல் புலிகளின் மறுபிறப்பு யார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்குள்ளது.//

குறிப்பிட்ட நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட நபரின் புலித்தொடர்பு மற்றும் அவரின் குடும்பத்தவ்ர்களில் யார் யார் பாசிச இயக்கத்தில் என்ன பதவிகளை வகித்தார்கள் போன்ற விபரங்கள் வெளிப்பிரதேச மக்கள் இன்றுதான் அறிந்துகொண்டாலும் புலிகளின் மேல்மட்டத்துடன் இருந்த தொடர்புகளை மறைக்காத குருபரனுக்கு தெரியாமல் இருந்தது என்பது முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.

//நீதிபதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டித் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவுகளால் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்கு கேள்வி எழுகிற போது தன்னைப் பாதுகாப்பதற்காக முஸ்லீம் மக்களின் பொதுவான பிரச்சனைகளுடன் அதனை முடிச்சு போடுவதுடன் அதற்குள் புலிகளையும் இழுக்கும் கழிசடை அரசியலை அமைச்சர் ரிட்சட் பதியுதீன் செய்வது ஒன்றும் உலக அதிசயமல்ல//

முதலில் அமைச்சர் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக குருபரன் எவ்வாறு சந்தேகம் இன்றி அறிந்துகொண்டார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். ஒரு குற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தேக நபர் என்றே தீர்ப்பு வரும்வரை விளிக்கும் ஊடகதர்மத்தை மீறியதன் காரணமென்ன?

மற்றும் முஸ்லிம் மக்களின் பொதுவான பிரச்சினையான மீன்பிடித்துறையை இன்னோர் சமூகம் அபகரிப்பது அமைச்சரின் தனிப்பட்ட பிரச்சினையாக குருபரன் அவர்கள் எப்படி கருதுகிறார்? அவ்வாறு கருதுவதற்கான் முகாந்திரத்தை அவரால் முன்வைக்கமுடியுமா?

//நீதிமன்றத்தை நீதித்துறையை நீதிபதியை அச்சுறுத்தியமை குறித்து நீதி அமைச்சர் என்ற வகையில் கவலையடைவதாக அமைச்சர் றவூவ் ஹக்கீம் கூறினாரே//

ரவூப் ஹக்கீம் அவர்கள் "அப்படியான சம்பவம் நடந்திருந்தால்" என்றே கூறியிருக்கிறார். கீழே உள்ள பிபிசி செய்தி அதற்கு ஆதாரமாகும்.

"மன்னார் நீதவானுக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தானும் அமைச்சர் என்ற ரீதியில் இன்னொரு அமைச்சரைப் பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் அப்படியான சம்பவம் நடந்திருந்தால் அதற்காக சட்டத்தரணி என்ற ரீதியில் தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்."

அமைச்சர் ஹக்கீம் சொன்னதை சரியாக விளங்க  குருபரன் அவர்களுக்கு தமிழ் அறிவு போதாதா என்ற சந்தேகம் எழுகின்றது.

தொடரும்