ஊடகமொன்றில் தாலிபான் பற்றி அண்மையில் ஒரு நிகச்சி நடந்தது. இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்கள் இதில் வெளிப்படையாகவே புலப்பட்டதனால் சில முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.
தாலிபான் என்று சொல்லப்படும்போதே கடும்போக்கு இஸ்லாமியர் என்றும் ஒட்டிக்கொள்கிறது. மாற்றுமதத்தவரிடையே காணப்படும் மிகப்பிழையான கருத்து இதுவாகும்.
இஸ்லாத்தில் கூட்டல் குறைத்தல்களுக்கு இடமில்லை. இஸ்லாம் என்பது குர் ஆனையும் அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உதாரணமாக வாழ்ந்து காட்டிய நடைமுறைகளுமாகும். இவற்றில் பலவற்றை வசதிக்கேற்ப விட்டுவிட்டு வாழ்வோரை சிலர் moderate முஸ்லிம்கள் என்று கருதுகிறார்கள். இவர்கள் முஸ்லிம் பெயர்களை கொண்டிருப்பதனால் இவர்கள் இஸ்லாத்தின் வழியில் வாழ்பவர்கள் என்று கொள்ளப்பட முடியாது.
இன்னும் சில முஸ்லிம்கள் தங்கள் அறியாமையின் காரணமாக இஸ்லாத்தின் பெயரால் செய்யும் விடயங்கள் அவர்களை முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கருதச்செய்திருக்கிறது.
இஸ்லாத்தில் இவ்வாறான இரண்டு பிரிவுகளும் இல்லை என்பதை முஸ்லிம் அல்லாதோர் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆப்கானிஸ்த்தான் மீது மேற்கத்தைய நாடுகள் போர்தொடுக்கும்போதெல்லாம் ஏனைய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம்,
அங்கு கொல்லப்படுவது முஸ்லிம் என்பதலாகும் எனபதையும்
அதன்காரணமாக இவர்களும் தாலிபான் ஆட்சியை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவது தவறு
என்பதையும் பல முஸ்லிம் அல்லாதவர்கள் புரிந்துகொள்வதேயில்லை.
அடுத்தது ஆயுதமேந்திய முஸ்லிம்களையெல்லாம் ஜிஹாத் என்று வரைவிலக்கணப்படுத்திக்கொள்வது முஸ்லிம் அல்லாதோரின் பரவலான நடைமுறை. ஜிஹாத் என்பது அடிப்படை உரிமைக்கான போராட்டமே. ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளாக வதியும் உரிமை, தான் விரும்பும் சமயத்தை பின்பற்றும் உரிமை என்பன வருகின்றன.
தனது வீட்டில் இருந்து துரத்தப்படல், மதரீதியாக ஒடுக்கப்படல் என்பன இடம்பெறும்போது அது போராடவேண்டியது கடமையாகும். அது ஜிஹாதில் வரும். உம் பலஸ்தீன மக்கள் போராட்டம். ஆனால் வெறுமனே பதவிக்கான போராட்டங்கள் எல்லாம் ஜிஹாதில் அடங்காது. அதேபோல் முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கும் ரவுடிக்கும்பல்களையெல்லாம் ஜிஹாத் என்று வகைப்படுத்துவது இலங்கை இந்திய ஊடகங்களில் நடைபெற்றாலும் அது இஸ்லாமிய அடிப்படையில் ஜிஹாத் ஆகாது.
இன்னும் ஒரு போராட்டம் செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க கோவையொன்றுகூட இஸ்லாத்தில் இருக்கிறது. நியாயமான போராட்டத்தில்கூட ஒழுக்கமாக நடந்துகொள்வது இஸ்லாத்தில் அவசியமாகும். இவ்வாறான ஒழுக்கங்களை மீறுவது மீறியவர்களை இஸ்லாத்தில் நின்றும் தூரமாக்கக்கூடிய அளவுக்கு பாரதூரமானதாகும்.
இன்னும் பல மாற்று மதத்தவர்கள் கருதுவதுபோல ஜிஹாத் என்பது இஸ்லாத்தை திணிப்பதல்ல. ஒருவர் முஸ்லிமாக மாறுவதற்கு மிக அடிப்படையான நிபந்தனை அவர் முழுமனதோடு இறைவன் மீது நம்பிக்கைவைப்பதாகும்.
இன்னும் சிலர் முஜாஹித், ஷரீஅத் சட்டம் என்பன பற்றிப்போசப்படும்போதெல்லாம் தாலிபானிஸம் என்றே கருதுகிறார்கள். முஜாஹித் என்றால் போராளி. ஷரீஅத் சட்டம் என்பது பலர் நினைப்பதுபோல் தலையை வெட்டுவதல்ல. இஸ்லாமிய சட்டத்தில் பொய் சாட்சியம் சொல்பவருக்கு தண்டனையுண்டு என்பதும் அவ்வாறு பொய்சாட்சியம் சொல்பவர் அதன்பின் சட்சியம் சொல்லும் தகுதியையே இழந்துவிடுவார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இன்னும் "மத்ரசா" (கல்விக்கூடங்கள்) இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஒருவடிவம் என்றும் பலர் கருதுகிறார்கள். இவர்கள் நினைப்பதுபோல் யுத்தத்திற்கு பயிற்றுவிக்கும் இடமல்ல இக்கல்விக்கூடங்கள். இஸ்லாத்தை பற்றி அறியும் பாடசாலையே. இஸ்லாத்தை முழுமையாக அறிந்துகொண்டவர் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய ஒழுக்கங்களை மீறமாட்டார் என்பதும் கவனத்தில்கொள்ளப்படவேண்டியதாகும்.
எனவே பொறுப்பான ஊடக பதவிகளில் இருப்பவர்கள் தாலிபான் இஸ்லாத்தின் அடிப்படை வடிவம் என்ற வகையில் கருத்துக்களை தெரிவிப்பது, அல்லது அவ்வாறு பொதுமக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவற்ற ரீதியில் அல்லது மறைமுகமாக கருத்துக்களை கூறுவது என்பவற்றை தவிர்ந்து கொள்ளவேண்டும்.
தொடரலாம்..
:a:
ReplyDelete